மதுரை: ஐ.பி.எல்.-கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழாவின் போது ஆபாச நடனம் ஆடிய நடிகை, நடிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று தொடர்ந்த வழக்கில் நடிகர்கள் அமிதாப்பச்சன், சல்மான்கான், நடிகை கரினாகபூர் உள்ளிட்ட 10 பேர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீசு அனுப்பியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த ஜெபக்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழா கடந்த 3.4.2012 அன்று சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதனாத்தில் நடைபெற்றது. அப்போது கண்கவர் கலைநிகழ்ச்சிகள், நடனம், நாட்டியம் போன்றவை நடத்தப்பட்டன. இதில் நடிகர்கள் அமிதாப்பச்சன், சல்மான்கான், நடிகைகள் கரினாகபூர், பிரியங்காசோப்ரா, அமெரிக்க பாப் பாடகி கேத்திபெர்ரி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் போலிஞ்சர் ஆகியோர் அருவறுக்கத்தக்க வகையில் ஆபாசமாக நடனம் ஆடினர். இதன் மூலம் தமிழக கலாசாரம் சீரழிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே வழக்கு தொடர்ந்தேன். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனுதாரரின் புகார் மீது தமிழக போலீஸ் டி.ஜி.பி. உரிய நடவடிக்கை எடுக்க கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஏ.செல்வம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, தமிழக போலீஸ் டி.ஜி.பி மற்றும் நடிகர்கள் அமிதாப்பச்சன், சல்மான்கான், நடிகைகள் கரினாகபூர், பிரியங்காசோப்ரா, அமெரிக்க பாப் பாடகி கேத்திபெர்ரி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் போலிஞ்சர் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். வழக்கின் விசாரணையை வரும் 31-ந் தேதிக்கு நீதிபதி செல்வம் ஒத்திவைத்தார்.
Post your comment


