மத்திய அரசின் சேவை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியா முழுவதும் திரையுலகம் சார்பில் நாளை (வியாழக்கிழமை) வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது. படப்பிடிப்புகள்-சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. சென்னையில், பொதுக்கூட்டம் நடக்கிறது.
மத்திய அரசு 10.3 சதவீதம் விதித்து இருந்த சேவை வரியை, திரையுலகத்துக்கு 30 சதவீதமாக உயர்த்தி இருக்கிறது. இதற்கு இந்தியா முழுவதும் உள்ள திரையுலக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சேவை வரி உயர்வை கண்டித்து இந்திய திரையுலகமே போராட்டத்தில் குதிக்கிறது.
திரையுலகின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், நாளை (வியாழக்கிழமை) இந்தியா முழுவதும் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டு, தியேட்டர்கள் மூடப்படுகின்றன.
இதுபற்றி இந்திய திரையுலக சம்மேளன தலைவர் வினோத் கே.லம்பா கூறியதாவது:-
``திரையுலகம் ஏற்கனவே ஏராளமான பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளன. ஏறக்குறைய 95 சதவீத படங்கள் தோல்வி அடைகின்றன. 5 சதவீத படங்கள்தான் வெற்றி பெறுகின்றன. சினிமாவுக்கு ஏற்கனவே பொழுதுபோக்கு வரி விதிக்கப்பட்டு வருகிறது. எனவே சேவை வரியை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும்.
சேவை வரியை ரத்து செய்யக் கோரியும், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கவும் இந்திய திரையுலக சம்மேளனம் ஒரு முழுமையான போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து இருக்கிறது.
இதற்காக, நாளை (வியாழக்கிழமை) இந்தியா முழுவதும் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்படும். ஸ்டூடியோக்கள் மூடப்படும். படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படும். திரையுலகம் சம்பந்தப்பட்ட அத்தனை அமைப்புகளும் நாளை ஒரு நாள் மட்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.
இந்த போராட்டத்துக்கு சின்னத்திரை தயாரிப்பாளர்களும் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள்.''
இவ்வாறு வினோத் கே.லம்பா கூறினார்.
சேவை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் நடைபெற இருக்கிற வேலை நிறுத்த போராட்டம் பற்றி முடிவு எடுப்பதற்காக, தமிழ் திரையுலகின் அனைத்து அமைப்புகளை சேர்ந்தவர்களின் ஆலோசனை கூட்டம், சென்னை பிலிம்சேம்பரில் நேற்று மாலை நடந்தது.
இதில், திரையுலகம் ஏற்கனவே பல சுமைகள் காரணமாக நசிந்த நிலையில் உள்ளது. எனவே சேவை வரியை முழுமையாக ரத்து செய்யக்கோரி, நாளை (வியாழக்கிழமை) முதல் முறையாக இந்தியா முழுவதும் நடைபெறுகிற வேலை நிறுத்த போராட்டத்தில், தமிழ் திரையுலகை சேர்ந்த அனைத்து அமைப்புகளும் பங்கேற்கும்.
நாளை, தமிழ் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. தியேட்டர்களில் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படும். சேவை வரியால் திரையுலகுக்கு ஏற்படும் பாதிப்புகளை விளக்கும் வகையில், சென்னையில் பிலிம் சேம்பர் வளாகத்தில் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கி, மாலை 4 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
Post your comment
| Related News | |
![]() |




