மறைந்த நடிகை எஸ்.என். லட்சுமி மகத்தான திறமை வாய்ந்தவர். அவர் ஒரு பொக்கிஷம் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
பழம்பெரும் நடிகை எஸ்.என். லட்சுமி கமல் ஹாசனின் ஆஸ்தான நடிகை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அவர் கமலின் தேவர் மகன் முதல் விருமாண்டி வரை அனைத்து படங்களிலும் நடித்துள்ளார். தனது படங்களில் நல்ல கேரக்டர் இருந்தால் கொடுக்கத் தவறாதவர். கமலைப் போலவே லட்சுமியும் கே.பாலச்சந்தர் பட்டறையிலிருந்து வந்தவர் என்பதால் லட்சுமி மீது தனிப்பாசம் கொண்டிருந்தார் கமல்.
எஸ்.என்.லட்சுமி குறித்து கமல் வருத்தம் தெரிவித்துள்ளார். மும்பையில் தற்போது விஸ்வரூபம் படப்பிடிப்பில் உள்ள கமல் லட்சுமி குறித்துக் கூறுகையில்,
எனக்கு மறைந்த நடிகை எஸ்.என். லட்சுமி நல்ல பழக்கம். அவரது திறமையைப் பார்த்து வியந்து பாராட்டியுள்ளேன். கே. பாலசந்தரின் நாடகப்பள்ளியில் இருந்து நான் தேர்ந்தெடுத்த பொக்கிஷம் அவர். அபாரத் திறமை வாய்ந்தவர்.
மைக்கேல் மதன காமராஜனில் திருட்டுப்பாட்டியாக வந்த அவர் தானா தேவர் மகனில் பெரியாத்தாவாகவும், விருமாண்டியில் பாட்டியாகவும் வந்தார் என்று என்னால் நம்பவே முடியவில்லை.
இளம்பெண்ணாக இருக்கையிலேயே உங்களை அம்மாவாக நடிக்க வைத்துவிட்டனர் என்று நான் கிண்டலடிப்பேன். அதற்கு அவர், ஆமாம் தம்பி, அப்படித்தான் ஆயிடுச்சு என்று சிரித்துக் கொண்டே சொல்வார். அவர் ஆர்.எஸ். மனோகர், சிவாஜி, எம்.ஜி.ஆர் என பல தலைமுறை நடிகர்களுக்கு அம்மாவாக நடித்துள்ளார்.
1960களுக்குப் பிறகு எஸ்.என். லட்சுமி, காக்கா ராதாகிருஷ்ணன் மற்றும் நாகேஷ் போன்ற சிறந்த நடிகர்கள் எல்லாம் காணாமல் போய்விட்டனர். அத்தகைய திறமை வாய்ந்தவர்களை கண்டுகொள்ளாமல் இருக்கக் கூடாது மாறாக போற்ற வேண்டும் என்று நினைத்தேன். அதனால் அவர் உயிருடன் இருக்கும் வரையிலும் அவரைக் கொண்டாடினேன், இனியும் கொண்டாடுவேன்.
கதாபாத்திரம் இது தான் என்று சொன்னாலே போதும். அவர் அதை புரிந்து கொண்டு கச்சிதமாக நடிப்பார், பிரமாதமாக நடிப்பார் என்றார் கமல்.
Post your comment




