ஷாரூக்கான் மீது மும்பை கிரிக்கெட் சங்கம் விதித்துள்ள 5 ஆண்டு தடைக்கு எதிராகக் கிளம்பியுள்ளது பாலிவுட். பல பிரபலங்கள் கிரிக்கெட் சங்கத்தை வெளிப்படையாகக் கண்டித்துள்ளனர்.
ஷாரூக்கான் செய்ததே நியாயம் என பாலிவுட் பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தங்கள் கருத்துக்களை தொடர்ந்து ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூகத் தளங்களில் வெளியி்ட்டு வருகின்றனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இணை உரிமையாளரான ஷாரூக்கான், குடித்துவிட்டு வந்து கலாட்டா செய்ததாகக் கூறி, வான்கடே மைதானத்தில் நுழைய 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது மும்பை கிரிக்கெட் சங்கம். இதற்குக் காரணம் முன்னாள் முதல்வரும் மத்திய அமைச்சரும் இப்போது சங்கத்தின் தலைவராகவும் உள்ள விலாஸ் ராவ் தேஷ்முக்தான் என்கிறார்கள்.
ஆனால் ஷாரூக்கானோ, தான் குடிக்கவில்லை என்றும், அத்துமீறி நடந்த மைதான காவலர்களிடமிருந்து மகளைக் காக்கவே தான் முயன்றதாக ஷாரூக்கான் கூறியிருந்தார். ஆனால் அவர் விளக்கத்தை ஏற்கவே இல்லை மும்பை கிரிக்கெட் சங்கம்.
இந்த தடை குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்து, ஷாரூக்குக்கு ஆதரவுக் குரல்கள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. அரசியல் தலைவர்கள் லாலு பிரசாத் யாதவ், மமதா பானர்ஜி உள்ளிட்டோர் ஏற்கெனவே ஷாரூக்குக்கு ஆதரவு தெரிவித்தும், கிரிக்கெட் அமைப்புகளை சாடியும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த ஐபிஎல்லே வேண்டாம்... மூட்டை கட்டுங்கள் என்று கோபத்துடன் கூறியுள்ளார் லாலு.
இப்போது கிட்டத்தட்ட பாலிவுட் மொத்தமும் ஷாரூக்கானுக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளது. மும்பை கிரிக்கெட் சங்கம் செய்தது முட்டாள்தனம் என்றும், தனது தவறை மறைக்க செய்த நாடகம் என்றும், எங்கிருந்து இந்த சர்வாதிகாரம் வந்தது ஒரு சாதாரண கிரிக்கெட் சங்கத்துக்கு என்றும் கொந்தளித்துள்ளனர்.
பிரபல இயக்குநர் கரண் ஜோஹர் கூறுகையில், "உலகின் மிகச் சிறந்த தந்தைகளுள் ஒருவர் ஷாரூக்கான். மகளைக் காக்க ஒரு தந்தையாக அவர் வாதாடியுள்ளதை தவறு என்று கூறுவது எத்தனை பெரிய தவறு. அந்த நேரத்தில் அவர் ஒரு தந்தை. அவர் இடத்தில் வேறு யார் இருந்திருந்தாலும் நிலைமை மோசமாகியிருக்கும். ஷாரூக் கண்ணியமாகவே நடந்துள்ளார்," என்றார்.
செலீனா ஜெட்லி: தன் குழந்தைக்கு ஆபத்து என்றால் ஒரு தந்தை எந்த அளவுக்கு வேண்டுமானாலும் போகலாம். சட்டப்படி கூட அதில் தவறு காண முடியாது. நடிகர்களும் மனிதர்கள்தானே... நானாக இருந்தால் என்ன செய்திருப்பேன் என்றே தெரியாது...
ரோனித் ராய்: அங்கே என்ன நடந்ததென்று எனக்கு நன்கு தெரியும். ஷாரூக் மகளைத் தொட்டு, பலமாகத் தள்ளியதை அறிவேன். அதனால்தான் ஷாரூக் கோபப்பட்டார். ஒரு தந்தையாக வெல்டன் ஷாரூக்! மகளைக் காக்க போராடியதற்காக ஷாரூக் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். சத்யமேவ ஜெயதே!
அனுராக் பாஸு: ஷாரூக் பக்கம் எந்தத் தவறும் இல்லை. அவர் செய்தது நியாயமே.
இசையமைப்பாளர் விஷால்: என் குடும்பத்தை யாராவது தொட்டால் அழிச்சிடுவேன். ஷாரூக் பக்கம்தான் நியாயம்... கிரிக்கெட் சங்கத்துக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
Post your comment


