தரமணி படத்திற்குப் பிறகு ராக்கி படத்தில் நடிக்கிறார் வசந்த் ரவி. இவர் சென்னை கார்ப்பரேஷன் கமிஷனர் ஜி.பிரகாஷ் ஐ.ஏ.எஸ்ஐ சந்தித்து கொரோனா நெருக்கடியின் போது தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களின் நலனுக்காக உழைக்கும் சுகாதாரத் தொழிலாளர்களுக்கும் 1000 சுகாதார கருவிகளை வழங்கினார்.
வசந்த் ரவி கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றி பேசியதாவது, இந்தப் பருவத்தில் வாழ்க்கையே மாறி விட்டது. இது நல்லதா கெட்டதா என்பது தெரியாது புரியாது. ஆனால் இந்த நேரத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம். முக்கியமாக பாதுகாப்பாக இருப்போம்.
பல்வேறு துறைகளை சார்ந்த மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் முடிந்த பங்களிப்பை கொடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன். இதைப் பார்க்கும்போது இந்த நெருக்கடியிலிருந்து நாம் மீண்டு வருவோம் என்ற நம்பிக்கை வருகிறது. ஆனால், சென்ற வாரம் நான் மளிகை கடைக்கு சென்றுக் கொண்டிருக்கும் போது, அந்த பாதையில் தூய்மை பணியாளர்கள், முகமூடி மற்றும் கையுறைகள் இல்லாமல் இருந்தார்கள். அதைப் பார்க்கும் போது நான் மிகவும் வருந்தினேன்.
இதுபோன்று நெருக்கடியான நேரத்தில் நமக்காக நமது தெருவை சுத்தமாக வைத்திருக்கும் இந்தத் தொழிலாளர்கள் எந்தவித பாதுகாப்பு கவசமும் இன்றி பணியாற்றுகிறார்கள். ஆகையால், அவர்களுக்கு உரிய சுகாதார கருவிகளை சென்னை கார்ப்பரேஷன் கமிஷனரிடம் வழங்கினேன். இதுபோல், உங்கள் பகுதியை சுத்தமாக வைத்திருக்கும் சுகாதார பணியாளர்களுக்கு உங்களால் முடிந்த கருவிகளை வழங்குங்கள் என்றார்.
