மணிரத்னம் இயக்கத்தில் காற்று வெளியிடை படத்தில் நடித்தவர் அதிதி ராவ். மீண்டும் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் சைக்கோ படத்தில் நடித்த அதிதி அடுத்து விஜய் சேதுபதியுடன் துக்ளக் தர்பார் என்ற படத்திலும் நடிக்க உள்ளார்.
கடந்த 2018ம் ஆண்டு தனுஷ் நடித்து இயக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக அதிதி நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. 2 வருடம் ஆகியும் அப்படம் அறிவிப்போடு நிற்கிறது. அடுத்தடுத்து அசுரன், பட்டாஸ் படங்களில் நடித்த தனுஷ், தற்போது சுருளி, கர்ணன் என படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதனால் ஏற்கனவே அவரது இயக்கத்தில் உருவாகும் என அறிவிக்கப்பட்ட படம் இப்போதைக்கு தொடங்குமா என சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து அதிதிராவ் கூறும்போது, ‘தனுஷ் இயக்கத்தில் நடிப்பேன். அது கண்டிப்பாக நடக்கும். எனது உள்ளுணர்வு சொல்வது எப்போதுமே சரியாக இருக்கும். தனுஷ் ஹீரோவாக நடிப்பதுடன் அவரே இயக்குனராக இருக்கிறார் என்பதையும் மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். அவர் சிறந்த நடிகர் மட்டுமல்ல மற்றவர்களிடமிருந்து நல்ல நடிப்பையும் வெளிக்கொண்டு வரும் திறமையும் அவருக்கு இருக்கிறது. இவ்வாறு அதிதி ராவ் கூறி உள்ளார்.
