சரத்குமார் மீண்டும் அதிக படங்கள் கைவசம் வைத்து தீவிரமாக நடிக்க தொடங்கி உள்ளார். வானம் கொட்டட்டும், நா நா, ரெண்டாவது ஆட்டம், பிறந்தாள் பராசக்தி ஆகிய படங்களில் நடிக்கிறார். மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்துக்கும் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
சரத்குமார் அளித்த பேட்டி வருமாறு:- “அரசியல் பணிகளுக்கு இடையில் சினிமாவிலும் நடித்து வருகிறேன். அரசியலை நான் தொழிலாக செய்யவில்லை ஒரு பணியாகவே செய்கிறேன். சினிமாதான் எனது தொழில். மக்களுக்கு சேவை செய்யவும் கட்சி நடத்தவும் சினிமாவில் சம்பாதிக்க வேண்டி உள்ளது. அதனால்தான் சமீப காலமாக அதிக படங்களில் நடிக்கிறேன்.
“சூர்யவம்சம் படம் வெளியாகி 20 ஆண்டுகளுக்கு பிறகு ராதிகாவுடன் வானம் கொட்டட்டும் படத்தில் இணைந்து நடித்துள்ளேன். அடுத்து ராதிகா, வரலட்சுமி ஆகியோருடன் சேர்ந்து ‘பிறந்தாள் பராசக்தி’ படத்தில் நடிக்க இருக்கிறேன். இதன் படப்பிடிப்பு அடுத்தமாதம் தொடங்குகிறது. சினிமாவில் வரலட்சுமியின் வளர்ச்சியை பார்த்து ஒரு தந்தையாக பெருமை கொள்கிறேன்.
தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தயாராகும் வெப் தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். பொன்னியின் செல்வன் படத்தில் நான் என்ன கதாபாத்திரத்தில் வருகிறேன் என்பதை மணிரத்னம்தான் சொல்ல வேண்டும். நடிகர் சங்க வரலாற்றில் முதல் முறையாக நடிகர் சங்கத்துக்கு சிறப்பு அதிகாரியை நியமித்து உள்ளனர். நடிகர்களுக்குள் ஒற்றுமை இல்லாததே இதற்கு காரணம்.”
இவ்வாறு சரத்குமார் கூறினார்.