இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரனாவத். ஜனவரி 24-&ந்தேதி வெளியாகும் ‘பங்கா’ திரைப்படத்தில் பள்ளி வயது சிறுவனுக்கு தாயாக நடித்துள்ள கங்கனா ரணாவத், தற்போது அந்தப் படத்துக்கான புரமோஷன் வேலைகளில் பிசியாக இருக்கிறார்.
அதன் ஒரு பகுதியாக கங்கனா, ஆங்கில பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் தனது திருமணம் பற்றியும் தனது குடும்பத்துடன் மீண்டும் தான் இணைந்ததைப் பற்றியும் கூறியிருக்கிறார்.
திருமணம் குறித்து கங்கனாவிடம் கேட்டபோது, ‘எனது வாழ்க்கையை இப்போதுதான் வாழத் தொடங்கி இருக்கிறேன். என்னோடு சேர்ந்து வாழ விரும்புபவர் கிடைத்தால் ஓகேதான். ஆனால், இந்தக் காலகட்டத்தில் சுமைகளை நான் விரும்பவில்லை. எனவே, என்னை விரும்பி வருகிறவர், குடும்பத்துக்குப் பொறுப்பெடுத்துக் கொள்பவராக இருக்க வேண்டும்.
இந்த உலகத்துக்காகச் செய்வதற்கும் உலகுக்குத் தருவதற்கும் நிறைய உள்ளது. முதன்முறையாக நான் என்னைப் பற்றிச் சிந்திக்கிறேன். நான் எனது வாழ்வில் ஈட்டியதை அனுபவிக்கவும், எனக்கே எனக்கான வாழ்வை வாழவும் செய்கிறேன். எனவே, இன்னொரு குடும்பத்துக்காக உழைப்பதற்கு எனக்கு நேரமும் சக்தியும் இல்லை. பின்னாள்களில் நடக்கலாம்’ என்று கூறியுள்ளார்.
குடும்பத்தைப் பற்றிக் கேட்டபோது, ‘15 வயதில் என் குடும்பத்தைவிட்டுப் பிரிந்து சென்றேன். இப்போது மீண்டும் சேர்ந்திருக்கிறேன். இந்த இணைவு, என் வெற்றிகளால்தான் சாத்தியமானது. நான் வெற்றி பெறாமல் போயிருந்தால் எனக்கு என் கனவும் குடும்பமும் இல்லாமலே போயிருக்கும்’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.