இந்தி முன்னணி நடிகர் சல்மான்கான் நடிப்பில் பிரபு தேவா இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான ‘தபாங் 3’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இத்திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே 24.5 கோடி வசூல் செய்தது. எனினும் குடியுரிமை திருத்த சட்டத்தால் ‘தபாங் 3’ திரைப்படம் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் பரவின.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற அறக்கட்டளை நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்த படத்தின் நாயகி சோனாக்சி சின்கா கூறியதாவது:- ‘நாட்டில் என்ன நடக்கிறது என எல்லோருக்கும் தெரியும், எது முக்கியம் என்று மக்களுக்கு தெரியும், நாடு முழுவதும் நடைபெறும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடக்கும் போராட்டம் ஒரு திரைப்படத்தை விட முக்கியமானது’ என கூறியுள்ளார்.
மேலும் போராட்டம் குறித்து கேள்வி கேட்ட போது, ‘நான் இந்த நாட்டு மக்களுடன் இருக்கிறேன். அவர்களது உரிமை குரலை நீங்கள் பறிக்க முடியாது’ எனவும் கூறியுள்ளார். சோனாக்சி சின்கா, முன்னாள் மத்திய அமைச்சர் சத்ருகன் சின்காவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.