Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மாஸ்க்குகளை விட்டுக்கொடுங்கள் – காக்டெய்ல் நாயகி ராஷ்மி கோபிநாத் வேண்டுகோள்

Rashmi Gopinath

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு நாடே முடங்கி கிடக்கிறது. அரசின் உத்தரவை மதித்து சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வீட்டிற்குள்ளேயே இருக்கின்றனர். இதில் சிலர் மக்களுக்கு விழிப்புணர்வு தரும் விதமாக நல்ல ஆலோசனைகளையும் தருகின்றனர். யோகிபாபுவுடன் ‘காக்டெய்ல்’ மற்றும் சி.வி.குமார் தயாரிப்பில் ஒரு புதிய படம் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள ராஷ்மி கோபிநாத் மக்களுக்கு சில ஆலோசனைகளுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் தொற்றுநோயாக இருக்கிறது. அதனால் தயவுசெய்து வீட்டிலேயே இருங்கள். பொறுப்பில்லாமல் வெளியில் சுத்த வேண்டாம். பொழுதுபோக்கிற்காக நண்பர்களுடன் அரட்டை அடிக்க, பார்ட்டிக்கு செல்ல என வீட்டைவிட்டு எதற்காகவும் அநாவசியமாக வெளியே செல்லவேண்டாம். அப்படி செய்தால் அது நம் அனைவரையுமே கடுமையாக பாதிக்கும்.

அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்வது என்றாலும் மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள்.. உங்களுக்கான மாஸ்க்கை நீங்களே தயார் செய்து கொள்ள முடியும்.. எனக்கும் எனது குடும்பத்துக்கும் இந்த மாஸ்க்குகளை என் அம்மா தான் வீட்டிலேயே தயார் செய்தார்.

இந்த ஊரடங்கு முடிந்த பிறகும் நீங்கள் வெளியில் செல்லும்போது மாஸ்க் அணிந்து கொண்டு சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மாஸ்க் இல்லையா..? உங்கள் முகத்தை மறைக்க துப்பட்டா அல்லது கைக்குட்டையை பயன்படுத்தலாம்..

தயவுசெய்து சுகாதார நிபுணர்களுக்காக மாஸ்க்குகளை கொஞ்சம் விட்டுக்கொடுங்கள். ஏனென்றால் நம்மை விட அதிகமாக அவர்களுக்குத்தான் தேவைப்படும். அவர்கள் அனைவரும் நமக்காக போராடிக்கொண்டு இருக்கும் உண்மையான ஹீரோக்கள்’ என்றார்.