Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மோகன்லால் படத்தை எதிர்த்து வழக்கு

mohanlal

கேரள மாநிலம் கூடத்தாயி பகுதியை சேர்ந்தவர் ஜான் தாமஸ். இவரது மனைவி அன்னம்மா. இருவரும் ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள். இவர்களின் மகன் ரோய் தாமஸ், அன்னம்மாளின் அண்ணன் மேத்யூ, ஜான் தாமசின் அண்ணன் மருமகள் பீலி, அவரது ஒரு வயது குழந்தை அல்பன் உள்ளிட்ட அனைவரும் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர்.

இவர்கள் 6 பேரும் அடுத்தடுத்து உயிர் இழந்தனர். சாவில் மர்மம் இருப்பதாக கோழிக்கோடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் புதைக்கப்பட்ட உடல்களை தோண்டி எடுத்து ஆய்வு செய்தார்கள். அப்போது 6 பேரின் உடல்களிலும் விஷம் கலந்து இருந்ததும் சொத்துக்காக மருமகள் ஜோலி சயனைடு கொடுத்து இந்த கொலைகளை செய்து இருப்பதும் தெரிய வந்தது.

அவரை போலீசார் கைது செய்தனர். இந்த உண்மை சம்பவத்தை படமாக எடுக்கப்போவதாகவும் மோகன்லால் கதாநாயகனாக நடிப்பார் என்றும் தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூர் அறிவித்தார். படத்துக்கு கூடத்தாயி என்று பெயர் வைத்தனர். இன்னொரு பட நிறுவனமும் ஜோலி என்ற பெயரில் இதே சம்பவத்தை படமாக்கி வந்தது.

இந்த படங்களுக்கு தடை விதிக்க கோரி கொலை செய்யப்பட்ட ரோய் தாமசின் சகோதரி ரெஞ்சி மற்றும் கொலையாளி ஜோலியின் மகன்கள் ரெமோ, ரோனால்ட் ஆகியோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் சினிமா தயாரிப்பாளர்கள் நேரில் ஆஜராகுமாறு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.