Tamilstar
Sports

2011 உலக கிரிக்கெட் கோப்பையை இந்தியாவுக்கு இலங்கை விற்பனை செய்ததாக புகார்!

2011ம் ஆண்டு நடைபெற்ற உலக கிரிக்கெட் கோப்பை போட்டியில் இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் இலங்கை அணி விலை போய்விட்டதாக இலங்கையின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் பரபரப்பு புகார் ஒன்றை சாட்டியுள்ளார்.

இலங்கையின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரான மஹிந்தனன அலுத்கமாகே, உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் பேசுகையில், 2011ம் ஆண்டு உலகக் கோப்பையை இலங்கை இந்தியாவுக்கு விற்பனை செய்தது என்பதை நான் கூறிக்கொள்கிறேன், இதை நான் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த போதும் கூறினேன்.

அந்தப் போட்டி இலங்கையால் வெல்லப்படவேண்டியது, ஆனால் அது சமரசம் செய்யப்பட்டிருந்தது என்று நான் உணர்ந்தேன். இதைப் பற்றி என்னால் விவாதிக்க முடியும், மக்கள் இதைப் பற்றி கவலை கொள்வார்கள் என்பது எனக்குத் தெரியும் என்று கூறினார்.

இலங்கைக்கு வரும் ஆகஸ்ட் 5ல் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் தற்போதைய அரசில் மஹிந்தனன அலுத்கமாகே, எரிசக்திதுறை அமைச்சராக இருந்து வருகிறார்.

அமைச்சரின் இப்புகார் தொடர்பாக ஆதாரம் அளிக்கும்படி உலகக்கோப்பையின் போது கேப்டனாக செயல்பட்ட சங்கக்கரா கூறியுள்ளார். ஆதாரம் இருந்தால் அதை ஐசிசியிடம் அமைச்சர் அளிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மற்றொரு முன்னாள் கேப்டனும், இறுதிப் போட்டியில் சதம் அடித்தவருமான ஜெயவர்தனே இக்குற்றச்சாட்டை கேலி செய்துள்ளார். தேர்தல் நேரம் தொடங்கிவிட்டது எனவும் ஆதாரத்தை அளிக்கும்படியும் வலியுறுத்தியுள்ளார்.

மும்பையில் நடைபெற்ற உலக கோப்பை இறுதிப் போட்டியை அப்போதைய அதிபர் மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து மஹிந்தனன அலுத்கமாகே நேரில் கண்டு ரசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2011 ஆண்டு இலங்கை அரசின் போர் குற்றங்கள் ஐ நா சபையில் நடந்து கொண்டிருந்த சமயம், மனித உரிமை ஆதரவாளர்களும் உலகும் இலங்கைக்கு எதிரான இந்தியாவின் ஆதரவை எதிர்பார்த்து காத்தித்திருந்த சமயத்தில் இலங்கை அணியின் வெற்றி இந்திய மக்களை இலங்கைக்கு எதிராக மாற்றி அதுவே இந்திய அரசுக்கு அழுத்தத்தை ஏற்படுத்திவிடும் என்பதற்க்காக இந்த வெற்றி மகிந்த அரசால் விட்டுக்கொடுக்கப்பட்டதாக 2011ல் பல ஊடகங்களால் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டப்பட்டன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.