கல்கி கிருஷ்ணமூர்த்தியின் நாவலான பொன்னியின் செல்வன் கதைக்களத்தை அதே தலைப்போடு பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் மணிரத்தினம். மக்களிடையே அதிக எதிர்பார்ப்பை கொண்டுள்ள இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் திரையரங்கில் வெளியாக உள்ளது.
இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், ஜெயராம், பிரபு, ரகுமான், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லக்ஷ்மி, நிழல்கள் ரவி, சரத்குமார், ஷோபிதா, பிரகாஷ்ராஜ் உள்பட பல முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். மாபெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் தயாரித்துள்ளது.
அண்மையில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக கமல் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரை கதையை தான் இயக்கியிருந்தால் யார் யாருக்கு எந்தெந்த கதாபாத்திரம் கிடைத்திருக்கும் என்று அண்மையில் ரஜினி தெரிவித்திருந்தார். அதற்கேற்றார் போல் அவரது கற்பனைக்கு ஏற்றபடி பொன்னியின் செல்வன் போஸ்டர்களை எடிட் செய்து உள்ளனர் அது தற்பொழுது இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.
அதில், வந்திய தேவன் கதாபாத்திரத்தில் (ரஜினி), அருள்மொழி வர்மனாக (கமல்), குந்தவையாக (ஸ்ரீதேவி), பெரிய பழுவேட்டையராக (சத்யராஜ்), ஆதித்த கரிகாலனாக (விஜயகாந்த்) , நந்தினியாக (ரேகா), ஆகியோர் அப்புகைப்படங்களில் இடம் பெற்றுள்ளனர்.