தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 6 மற்றும் 9 என 2 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ள நிலையில், இந்த தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் போட்டியிட உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் தகவல் வெளியானது.
இந்நிலையில், அதனை உறுதிப்படுத்தும் வகையில், செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் ஒன்றியத்தில், ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு, நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ரகுபதி என்பவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதேபோல் செங்கல்பட்டு மாவட்டம், இலத்தூர் ஒன்றியம், வெளிக்காடு ஊராட்சியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சுபா என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதுதவிர உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள 9 மாவட்டங்களிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், விஜய் மக்கள் இயக்க கொடி மற்றும் நடிகர் விஜய்யின் புகைப்படம் உள்ளிட்டவற்றை பயன்படுத்திக் கொள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.