பிரபல தமிழ் சினிமா நடிகை ராதா. இவர் முரளி நடித்த சுந்தரா டிராவல்ஸ், சத்யராஜ் நடித்த அடாவடி, கார்த்திக் நடித்த கேம் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்து உள்ளார்.
முதல் கணவரை பிரிந்து மகன் மற்றும் தாயுடன் ஒரே வீட்டில் தங்கி உள்ள நடிகை ராதா, எண்ணூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் வசந்த ராஜா என்பவரை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, 2-வதாக திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.
இதனிடையே கடந்த ஏப்ரல் மாதம், கணவர் வசந்த ராஜா, தன்மீது சந்தேகப்படுவதாகவும், அடித்து கொடுமைபடுத்துவதாகவும் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நடிகை ராதா, பின்னர் இருவரும் சமரசமாக செல்வதாக புகாரை வாபஸ் பெற்றார்.
இந்தநிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது கணவரான சப்-இன்ஸ்பெக்டர் வசந்தராஜா தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக பரங்கிமலை போலீசில் புகார் அளித்துள்ளார் நடிகை ராதா.
அந்த புகார் மனுவில், தான் ஏற்கனவே கொடுத்த புகாரை காவல் நிலையத்தில் உள்ள தனது நண்பர்களை வைத்து அழித்து விட்டதாக வசந்தராஜா கூறியதாகவும், போலீசில் புகார் கொடுத்து என்னை எதுவும் செய்ய முடியாது என்று மிரட்டல் விடுத்ததாக தெரிவித்ததாகவும், வசந்தராஜா மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் பாரதி, இளம்பருதி ஆகியோர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடிகை ராதா அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.