Tamilstar
News Tamil News

அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் அனுஷ்கா சர்மா!

பிரபல இந்தி நடிகையும் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா படங்களை தயாரித்தும் வருகிறார். என்.எச்.19, பில்லாயூரி, பாரி ஆகிய இந்தி படங்கள் அவரது தயாரிப்பில் வந்தன. தற்போது வெப் தொடர்கள் தயாரிக்க தொடங்கி உள்ளார்.

அவர் தயாரித்துள்ள பாதல் லோக் என்ற வெப் தொடர் தற்போது இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த தொடரில் அருணாசல பிரதேச மாநிலத்தில் வாழும் குறிபிட்ட இன மக்களை அவதூறு செய்வதுபோன்ற காட்சிகள் இருப்பதாக அந்த இனத்தை சேர்ந்தவர்கள் தேசிய மனித உரிமை கமிஷனில் புகார் அளித்துள்ளனர்.

அந்த மனுவில், “வெப் தொடரில் எங்கள் இனத்தவரை இழிவுபடுத்தும் காட்சிகள் உள்ளன. இதனால் எங்கள் இனத்தவர்கள் வேதனையில் உள்ளனர். என்வே அந்த தொடரை தயாரித்துள்ள அனுஷ்கா சர்மா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதுபோல் அந்த இனத்தை சேர்ந்த இளைஞர் அமைப்பினர் அனுஷ்கா சர்மாவுக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பி உள்ளனர். இதற்கிடையே உத்தரபிரதேசத்தை சேர்ந்த எம்.எல்.ஏ நந்தகிஷோர் குர்ஜார் தனது புகைப்படத்தை அனுமதி இன்றி வெப் தொடரில் பயன்படுத்தி உள்ளதாக அனுஷ்கா சர்மா மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.