Tamilstar
News Tamil News

ஓ மை கடவுளே பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அசோக் செல்வன் நடிக்கும் படம் இதோ

Ashok selvan next Project

Dramedy எனும் பதம் வெளிநாட்டு திரைபடங்களில் தற்போது அதிகம் புழங்கும் ஒரு ஜானராக இருக்கிறது. ஆனால் நம் நாட்டில் அந்த வகை படங்கள் ஒரு பகுதியாகவே இருந்து வருகிறது. அதுவும் தமிழில் இந்த வார்த்தை வரும் முன்பாகவே அந்த வகையில் படங்கள் வந்திருக்கிறது.

நாம் மிக அற்புதமான குடும்ப படங்களை ஏராளமாக தந்திருக்கிறோம். உறவுகளின் சிக்கல்களை, மேன்மையை, உணர்வுபூர்வமாக, நகைச்சுவை கலந்து சொன்ன கதைகள் இங்கு ஏராளம்.

அந்த வகையில் கெனன்யா ஃப்லிம்ஸ் தயாரிப்பாளர் J.செல்வகுமார் நகைச்சுவை பொங்கும் உணர்வுபூர்வமான குடும்ப காமெடி டிராமாவை தனது அடுத்த தயாரிப்பாக தயாரிக்கவுள்ளார்.

தற்போதைக்கு தலைப்பிடப்படாத “தயாரிப்பு எண் 7 “( Production no 7) ஆகிய இந்த படத்தில் அசோக்செல்வன், நிஹாரிகா நாயகன் நாயகியாக நடிக்கிறார்கள்.

இயக்குநர் சுசீந்திரனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஸ்வாதினி தனது அறிமுக இயக்கமாக இப்படத்தை இயக்குகிறார். இன்று இப்படத்தின் துவக்கம் இசையமைப்பாளர் லியான் ஜேம்ஸ் பாடல் வேலைகளை துவக்கியதன் மூலம் இனிதே ஆரம்பித்தது.

கெனன்யா ஃப்லிம்ஸ் தயாரிப்பாளர் J.செல்வகுமார் கூறியதாவது….

எங்களின் கெனன்யா ஃப்லிம்ஸ் சார்பில் எப்போதும் புதிய இளம் திறமைகளை அறிமுகம் செய்வதிலும் உலகமெங்கும் இருக்கும் அனைத்து ரசிகர்களும் ரசிக்கும்படியான வித்தியாசமான கதைகளை தயாரிப்பதையும் முக்கிய குறிக்கோளாக கொண்டிருக்கிறோம்.

நான் எப்போதும் பாலிவுட்டில் Rajshri Productions நிறுவனம் தொடர்ந்து தயாரிக்கும் பெரும் வெற்றி தரும் குடும்ப டிராமாக்களை வியந்து பார்த்திருக்கிறேன். அவர்கள் தயாரித்த “ஹம் ஆஃப் கே ஹெய்ன் கோன்”, “ஹம் சாத் சாத் ஹெய்ன்” போன்ற படங்கள் என்னை பெரிதும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

அந்த வகையில் அதே போன்று குடும்ப உணர்வுகள், காதல், காமெடி என அனைத்தும் கலந்த ஒரு கதையை தேடியபோது இயக்குநர் ஸ்வாதினி அப்படியான ஒரு அட்டகாசமான திரைக்கதையுடன் என்னை அணுகினார்.

அதுமட்டுமல்லாமல் அவர் மேலும் ஒரு வருட காலம் தனது திரைக்கதையில் வேலை செய்து, குடும்ப உணர்வுகள் பொங்க, காதல், காமெடி சரிவிகிதத்தில் இருப்பது மாதிரி திரைக்கதையை மெருகேற்றினார்.

அவரது கடும் உழைப்பு என்னை ஈர்த்தது. “ஓ மை கடவுளே” மூலம் வெற்றியின் உச்சத்தை தொட்டிருக்கும் அசோக்செல்வனுடன் மீண்டும் இணைவது எங்கள் நிறுவனத்திற்கு பெரும் பலம். அற்புதமான திறமை கொண்ட, உணர்வுகளை எளிதில் திரையில் காட்டும் நடிகை நிஹாரிகா படத்தில் இணைந்திருப்பது மேலும் மகிழ்ச்சி.

இன்று இசையமைப்பாளர் லியான் ஜேம்ஸ் மேற்பார்வையில் பாடல் வேலைகளை துவக்கி, படத்தை ஆரம்பித்துள்ளோம்.

தற்போதைய சூழல் முழுக்க சமநிலையை அடைந்த பின் படப்பிடிப்பை துவக்கவுள்ளோம். படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்த பிறகான ஐந்தாவது மாதத்தில், படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்றார்.

படத்தில் மேலும் பணிபுரியவுள்ள நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை இறுதி செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது.

இப்படத்தில் இசையமைப்பாளராக லியான் ஜேம்ஸ், ஒளிப்பதிவாளராக AR சூர்யா, படத்தொகுப்பாளராக ரிச்சர்ட் கெவின் பணிபுரிகின்றனர்.