கால்பந்தாட்ட வீரராக இருக்கிறார் மனோஜ். கவுன்சிலருக்கு அடியாளாக வேலை செய்து வருவதால், தனது மகனையாவது சிறந்த கால் பந்தாட்ட வீரராக உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஒரு போட்டியின் போது, மனோஜுக்கு அடிப்பட்டு இறந்து விடுகிறார். இதனால், மனோஜின் மனைவி, நாயகன் விஸ்வாவிடம் இனிமேல் நீ கால்பந்தாட்டம் விளையாட கூடாது என்று கூறி வேற ஏரியாவிற்கு அழைத்து சென்று விடுகிறார்.
ஆனால், தந்தையின் கனவை நிறைவேற்ற தாய்க்கு தெரியாமல் கால்பந்தாட்டம் விளையாடி வருகிறார் விஸ்வா. நன்றாக விளையாடி சிறந்த வீரராக இருந்து வருகிறார். மனோஜின் நண்பரான நரேனிடம் பயிற்சி பெற்று வரும் நிலையில், தந்தை மனோஜ் விபத்தில் சாகவில்லை என்றும், அது திட்டமிட்ட கொலை என்றும் விஸ்வாவிற்கு தெரிய வருகிறது.
இதனால் கோபமடையும் விஸ்வா, கால்பந்தாட்டத்தை மறந்து தன் தந்தையை கொலை செய்தவனை பழி வாங்க நினைக்கிறார். இறுதியில் விஸ்வா, தந்தையை கொன்றவனை பழி வாங்கினாரா? தந்தையின் கனவை நிறைவேற்றினானா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விஸ்வா, புதுமுகம் என்று சொல்ல முடியாதளவிற்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். புட்பால் விளையாடும் போதும் சரி, பழி வாங்க நினைக்கும் போதும் சரி நடிப்பில் வித்தியாசம் காண்பித்திருகிறார். இவருடைய குரல் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. நாயகியாக நடித்திருக்கும் மிருனாளினி கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.
புட்பால் கோச்சராக மனதில் பதிந்திருக்கிறார் நரேன். தான் பயிற்சி செய்த மாணவன் கெட்ட வழியில் செல்லகூடாது என்று துடிக்கும் இவரது நடிப்புக்கு பெரிய கைத்தட்டல். தன்னுடைய அனுபவ நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருகிறார் மனோஜ். ஒரு தந்தைக்குண்டான கனவை நடிப்பில் பிரதிபலித்திருக்கிறார்.
கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து அதில் காதல், சென்டிமென்ட், ஆக்ஷன் கலந்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். மெதுவாக ஆரம்பிக்கும் திரைக்கதை போக போக வேகம் எடுத்திருக்கிறது.
விஸ்வாவிடம் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். அரோல் கரோலி இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணியில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். சுஜித் சாராங்கின் ஒளிப்பதிவு சிறப்பு.
மொத்தத்தில் ‘சாம்பியன்’ கைதட்டல் வாங்குகிறான்.