மைம் கோபி மற்றும் அருள்தாஸ் சகோதரர்கள் ஊர் பெரியவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் நடத்தி வரும் பள்ளியில் மாணவி ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போகிறார். மேலும் பள்ளியில் நடக்கும் குற்ற செயல்களை ஆசிரியை கேத்ரின் தெரசா கமிஷ்னர் அலுவலகத்திற்கு புகார் அனுப்புகிறார். அந்த புகாரின் பேரில் ரகசிய விசாரணை நடத்த போலீஸ் அதிகாரி ஒருவரை காவல்துறை அனுப்புகிறது. இந்நிலையில், உடற்பயிற்சி ஆசிரியராக பள்ளியில் புதிதாக வேலைக்கு சேர்கிறார் சுந்தர்.சி. இவர் வந்தவுடன் பள்ளியில் நடக்கும் பிரச்சனைகளை முடிக்கிறார். மேலும் மைம் கோபி, அருள்தாஸ் ஆகியோர் துவம்சம் செய்கிறார். மேலும் மைம் கோபி, அருள்தாஸ் ஆகியோரின் அண்ணன் தலைமறைவாக இருக்கும் ஹரிஷ் பெராடியை வெளிநாட்டில் இருந்து சுந்தர்.சி வரவழைக்கிறார். மேலும் சுந்தர் சி ரகசிய காவல்துறை அதிகாரி இல்லை என்று கேத்தரின் தெரேசாவுக்கு தெரிய வருகிறது.இறுதியில் சுந்தர்.சி யார்? எதற்காக ஹரிஷ் பெராடியை வரவழைக்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் சுந்தர்.சி ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சண்டைக் காட்சிகளில் அதிக டூப் போட்டு சமாளித்து இருக்கிறார். வடிவேலுவை பக்கபலமாக வைத்து திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார். வடிவேலுவின் டைமிங் காமெடி ஆங்காங்கே சிரிக்க வைத்து இருக்கிறது. குறிப்பாக நீண்ட வசனம் பேசி அசத்தி இருக்கிறார். நாயகியாக நடித்து இருக்கும் கேத்தரின் தெரேசா பொம்மை போல் வந்து சென்று இருக்கிறார். மற்றொரு நாயகியாக வரும் வாணி போஜன் நடிப்பால் மனதில் பதிந்து இருக்கிறார். வில்லன் கேங்கில் இருக்கும் மைம் கோபி, அருள்தாஸ், ஹரிஷ் பெராடி, காளை மற்றும் ஹீரோ கேங்கில் இருக்கும் பக்ஸ், முனீஷ்காந்த், சந்தான பாரதி, விச்சு அனைவரும் ஒன்று சேர்ந்து சிரிக்க வைக்க முயற்சி செய்து இருக்கிறார்கள்.இயக்கம்பணத்தை கொள்ளையடிப்பதை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார்.
இயக்குனர் சுந்தர்.சி. முதல் பாதி ஒரு படமும் இரண்டாம் பாதி ஒரு படமும் பார்த்த அனுபவத்தை கொடுத்து இருக்கிறார். சுந்தர்.சி படத்தில் கதை இல்லையென்றாலும் சதை இருக்கும் என்று சொல்லுவார்கள். இந்த படத்தில் இரண்டுமே இல்லாதது வருத்தம். வடிவேலுக்கு இன்னும் அதிக வாய்ப்பு கொடுத்து இருக்கலாம். தியேட்டர் காமெடி காட்சி பெரியதாக எடுபடவில்லை. ஒளிப்பதிவாளர் இ.கிருஷ்ண மூர்த்தி படம் முழுவதையும் கலர்புல்லாக காண்பிக்க முயற்சி செய்து இருக்கிறார். இசையமைப்பாளர் சத்யாவின் இசையில் பாடல்கள் மனதில் பதியவில்லை. பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. A.C. Shanmugam, A.C.S. Arunkumar, Kushboo சுந்தர் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
