அட்டகத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா.இரஞ்சித். இதனைத் தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் அடுத்ததாக ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்கிற படத்தை இயக்க உள்ளார். முழுக்க முழுக்க காதல் கதையம்சம் கொண்ட படமாக இது தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.
இதுவரை பா.இரஞ்சித் இயக்கிய 5 படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்து இருந்தார். அதனால் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்துக்கும் அவரே இசையமைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பா.இரஞ்சித் – சந்தோஷ் நாராயணன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், பா.இரஞ்சித் அடுத்ததாக இயக்கும் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்துக்கு வேறு இசையமைப்பாளரை தேடி வருவதாக கூறப்பட்டது.
அதன்படி இளையராஜா இசையமைக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது தென்மா என்பவர் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இசையமைப்பாளர் தென்மா பா.இரஞ்சித் தயாரித்த ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
