சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பிரபலங்கள் பலரும் படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். அந்தவகையில் தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் ராஜேஷ் ‘சூரரைப் போற்று’ படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டி உள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: “சூரரைப் போற்று எல்லாத் துறைகளிலும் உயர பறந்து கொண்டிருக்கிறது. ஒரு கோவக்கார இளைஞன், ஆர்வமிகு இளம் தொழில் அதிபர், அன்பான கணவன் என அனைத்துக் காட்சிகளிலும் சூர்யா சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார். அபர்ணா பாலமுரளி நடிப்பு அபாரமாக உள்ளது. தான் தோன்றும் ஒவ்வொரும் காட்சியிலும் தனது முத்திரையைப் பதித்திருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை படம் முழுவதும் அற்புதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நிகேத்தின் ஒளிப்பதிவு ஓவியங்களைப் போல இருக்கின்றன. கலை இயக்குநர் ஜாக்கி மற்றும் படத்தொகுப்பாளர் சதீஷ் சூர்யா நிச்சயமாக உயரங்களைத் தொடுவார்கள்.
ஊர்வசியின் நடிப்பு அற்புதம். அவர் தான் தோன்றும் காட்சிகளைத் தன் தோளில் சிரமமின்றி சுமந்து நம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடுகிறார்.
இது சூரரைப் போற்று அல்ல, சூர்யாவின் போற்று. அவர் மாறாவாகவே வாழ்ந்துள்ளார். இந்த ஆண்டுக்கான தேசிய விருது உங்களுக்காக காத்திருக்கிறது. இல்லையெனில், நான் அதற்காகப் போராடுவேன்.
இறுதியாக, சுதா கொங்கரா, தொலைநோக்கு பார்வை கொண்ட பெண். இந்தப் படைப்பின் மூலம் உச்சபட்ச நேர்த்தியை சம்பாதித்துள்ளீர்கள். சல்யூட்”. இவ்வாறு கே.ஜே.ஆர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
Salute to the entire team for creating #SooraraiPottru @Suriya_offl @2D_ENTPVTLTD #SudhaKongara @gvprakash @Aparnabala2 @nikethbommi @editorsuriya @jacki_art pic.twitter.com/ZD3wIrwms4
— KJR Studios (@kjr_studios) November 12, 2020