அஜித்குமார், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி வரும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் தற்போது இசை சர்ச்சையில் சிக்கியுள்ளது. இப்படத்தில் இசைஞானி இளையராஜாவின் புகழ்பெற்ற பாடல்களான ‘ஒத்த ரூவாய் தாரேன்’, ‘இளமை இதோ இதோ’, மற்றும் ‘என் ஜோடி மஞ்ச குருவி’ போன்ற பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இந்த பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி, படத் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸுக்கு இசைஞானி இளையராஜா 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து தயாரிப்பாளர் ரவி சங்கர் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், “இந்த பாடல்களைப் பயன்படுத்துவதற்கு தேவையான அனைத்து முறையான அனுமதிகளையும் நாங்கள் பெற்றுள்ளோம். சம்பந்தப்பட்ட இசை நிறுவனங்களுக்கு உரிய தொகையை செலுத்தி, தடையில்லா சான்றிதழும் பெற்றுள்ளோம். இதுவரை இளையராஜாவிடமிருந்து எங்களுக்கு எந்தவிதமான நோட்டீசும் வரவில்லை. அவர் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உள்ளது. தற்போது வந்துள்ள இந்த நோட்டீஸை எங்கள் சட்டக்குழு சந்தித்து, உரிய முறையில் பதிலளிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
