Tamilstar
Movie Reviews

இரும்பு மனிதன் திரைவிமர்சனம்

Irumbu Manithan Movie Review

நாயகன் சந்தோஷ் பிரதாப் ஓட்டல் தொழில் மீது ஆர்வம் கொண்டவர். நன்றாக சமைக்கவும் தெரிந்தவர். ஒரு சின்ன ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். அனாதைகளாக இருக்கும் 2 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்துவருகிறார். மனநலம் பாதித்த பிச்சைக்கார பெண்மணி ஒருவருக்கு பிறக்கும் குழந்தையும் அனாதையாகிவிட அதையும் எடுத்து மூவரையும் தன் சொந்த மகன்கள் போல வளர்க்கிறார்.

இந்த சூழலில் திருட வரும் கஞ்சா கருப்புவை தன் கடையிலேயே உதவியாளராகவும் வைத்துக்கொள்கிறார் சந்தோஷ். இந்நிலையில் இடங்களை மிரட்டி பிடுங்கும் தாதா மதுசூதனன் கண்களில் சந்தோஷின் கடை படுகிறது. சந்தோஷை மிரட்டி பணிய வைக்க முயல்கிறார். ஆனால் முடியவில்லை. ஒரு கட்டத்தில் தொழிலில் அபார வளர்ச்சி அடையும் சந்தோஷ் பல ஓட்டல்களுக்கு முதலாளியாகிறார்.

மகன்களை பிரித்துவிடுவார் என்பதால் காதலில் அர்ச்சனாவை ஒதுக்கும் சந்தோஷ், அதன் பின்னர் கல்யாணம் செய்துகொள்ளாமல் மகன்களுக்காகவே வாழ்கிறார். ஆனால் மகன்களோ சொத்துகளை பிடுங்கிக்கொண்டு சந்தோஷை நடுத்தெருவில் விடுகின்றனர். மகன்களின் துரோகத்தில் இருந்து சந்தோஷ் மீண்டு ஜெயித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

நாயகன் சந்தோஷ் பிரதாப் இதுவரை பார்த்திராத வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார். படத்தையே தன் நடிப்பால் தான் தாங்கவேண்டும் என்பதை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். இளவயது துடிதுடிப்பையும் முதுமையில் வரும் பொறுமையையும் அனுபவத்தையும் ஒருசேர காட்டி இருக்கிறார்.

அர்ச்சனா சந்தோஷை துரத்தி துரத்தி காதலிக்கிறார். திடீர் என்று அவர் மாறுவதை தான் நம்ப முடியவில்லை. கஞ்சா கருப்பு கலகலப்பாக கதையை நகர்த்துகிறார். இரண்டாம் பாதியில் உணர்வுபூர்வமான காட்சிகளிலும் கலக்கி இருக்கிறார். வழக்கமான வில்லன் தான் என்றாலும் மதுசூதனன் தோற்றங்களிலும் உடல்மொழியிலும் வித்தியாசம் காட்டுகிறார். மகன்களாக வரும் நிஷாந்த், அகில், திலீப் மூவரும் தங்கள் பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

இளைஞர்களுக்கு ஊக்கமும் உத்வேகமும் அளிக்கும் வகையில், தயாரிப்பாளர் ஜோசப் பேபியின் கதையை கையில் எடுத்து அதை ரசிக்கும் வகையில் சுவாரஸ்யமாக தர முயன்று இருக்கிறார் இயக்குனர் டிஸ்னி. சில காட்சிகள் மட்டும் பழைய படங்களை நினைவுபடுத்துவது பலவீனம். இருந்தாலும் ரசிக்க வைக்கின்றன.

பிள்ளைகளை முழுமையாக நம்பினால் என்ன நிலை ஏற்படும் என்பதையும் காட்டி இருக்கிறார். சமூகத்துக்கும் இளைஞர்களுக்கும் மிகவும் அவசியமான படமாக இரும்பு மனிதன் அமைந்துள்ளது.

கேஎஸ்.மனோஜின் இசையும் கே.கோகுலின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. எஸ்பி.அகமதுவின் படத்தொகுப்பில் இரண்டாம் பாதி விறுவிறுவென நகர்கிறது.

மொத்தத்தில் ‘இரும்பு மனிதன்’ வலிமை.