ஒரு தியேட்டரில் மர்மமான முறையில் அமைச்சர் மகனும் தியேட்டரில் வேலை செய்பவரும் கொள்ளப்படுகிறார்கள். இந்த கொலையாளியை கண்டுபிடிக்க போலீஸ் அதிகாரியாக இருக்கும் ரிஷி களம் இறங்குகிறார். தீவிரமாக விசாரிக்கும் நிலையில் அடுத்தடுத்து கொலைகள் நடந்து வருகிறது.
எந்தத் துப்பும் கிடைக்காத நிலையில் எல்லா கொலைகள் நடக்கும் இடத்தில் கஞ்சா இருப்பதை ரிஷி கண்டுபிடிக்கிறார். மேலும் இந்தக் கொலைகளை செய்தவர் ஒருவர்தான் என்பதையரியும் ரிஷி, அவன் யார்? எதற்காக கொலைகளை செய்கிறான்? என்பதை கண்டு பிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ரிஷி இதற்கு முன் அட்டு என்ற படத்தில் நடித்திருந்தார். முந்தைய படத்தை விட இந்த படத்தில் நடிப்பில் முதிர்ச்சி அடைந்து இருக்கிறார். போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். பல இடங்களில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ஆஷா பாத்தலோம், நாயகன் ரிஷியுடன் போலீசில் பணியாற்றுகிறார். கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். வில்லனாக நடித்திருப்பவர், கதாபாத்திரத்தை உணர்ந்து நடிப்பில் பளிச்சிடுகிறார்.
மரிஜுவானா என்றால் கஞ்சா என்று அர்த்தம். ஒரு மனிதன் உச்சக்கட்ட போதைக்கு ஆளானால் என்ன நடக்கும் என்பதை கதையாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் எம்டி ஆனந்த். நல்ல கதையை சிறந்த திரைக்கதையாக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர். முதல்பாதியில் ஹீரோ வில்லனை தேடி அலைகிறார். இரண்டாம்பாதியில் வில்லனை பிளாஷ்பேக் பேச வைத்திருக்கிறார். பவர் ஸ்டார் காமெடியை வேண்டுமென்றே திணித்தது போலிருந்தது. கொஞ்சம் சுவாரஸ்யத்தை கூட்டி இருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
கார்த்திக் குரு இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். குறிப்பாக தேவா பாடிய பாடல் ரிப்பீட் மோட். பாலா ரோசைய்யாவின் ஒளிப்பதிவு ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில் ‘மரிஜுவானா’ விறுவிறுப்பு குறைவு.