Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கோவிலில் பொங்கல் வைத்த நயன்தாரா.. வைரலாகும் புகைப்படம்

Nayanthara holding Pongal at the temple

‘போடா போடி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன், பிறகு விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரௌடிதான் படத்தை இயக்கியிருந்தார்.

இப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலிப்பதாக தகவல் வெளியான நிலையில், இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இத்தகவலை உறுதி செய்தனர். 6 வருடங்களாக காதலித்து வந்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவருக்கும் கடந்த ஆண்டே நிச்சயதார்த்தம் நடந்ததாக நயன்தாராவே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இதையடுத்து ரசிகர்கள் இவர்களது திருமணம் குறித்த கேள்விகளை தொடர்ந்து எழுப்பி வந்தனர்.

இந்நிலையில் நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஜூன் 9-ம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதையடுத்து நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் பல்வேறு கோவில்களுக்கு ஒன்றாக சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். நேற்று அவர்கள் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

இதற்காக நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு காலை 11.40 மணிக்கு வந்தனர். அப்போது விமான நிலையத்தில் இருந்த ஊழியர்கள் உள்பட பலரும் செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதையடுத்து தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே வழுத்தூரில் உள்ள விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோவிலான காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அப்போது பொங்கல் வைத்து பயபக்தியுடன் இருவரும் சாமி கும்பிட்டனர்.

நயன்தாரா வருவதை அறிந்த ஏராளமான ரசிகர்கள் கோவில் வளாகத்தில் காத்திருந்தனர். நயன்தாரா சாமி கும்பிட்டு வெளியே வந்தவுடன் ரசிகர்கள் சிலர் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அய்யம்பேட்டை போலீசார் செய்திருந்தனர்.