சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு கதை எழுதி வைத்து தயாரிப்பாளரை தேடி வருகிறார் கதாநாயகன். இவரிடம் தயாரிப்பாளர் ஒருவர் கதையை தனக்கு ஒரு நல்ல தொகைக்கு விற்கும்படி கேட்கிறார். இதனை ஒப்புக்கொள்ளாத கதாநாயகன் வேறு தயாரிப்பாளரை தேடி நகர்கிறார்.
இதனிடையில் 1000 ஆண்டுகள் பழமையான பல கோடி மதிப்பு கொண்ட பஞ்சலோக பன்றி வடிவ சிலையை கடத்துவதற்காக ஒரு ரவுடி கும்பல் மற்றும் போலீஸ்காரர் ஆகியோர் அந்த சிலையை தேடுகிறார்கள். இந்த கும்பலிடம் கதாநாயகன் சிக்கிக் கொள்கிறார். இறுதியில் இந்த கும்பலில் இருந்து நாயகன் தப்பித்தாரா? சிலை கிடைத்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.
இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிஷாந்த், விஜய் சத்யா, பாலாஜி ரத்தினம், செல்லா, வியன் மற்றும் பாஸ்கர் ஆகியோரின் நடிப்பில் எந்த குறையும் இல்லை. கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.
கிரைம் காமெடியில் எழுதப்பட்ட கதையை, சுவாரசியமான திரைக்கதையின் மூலம் சற்று கவனத்தை ஈர்த்திருக்கிறார் இயக்குனர் பாலா அரன். படத்தில் வடிவமைத்திருக்கும் சில திருப்பங்கள் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறது.
விக்னேஷ் செல்வராஜின் ஒளிப்பதிவு ஒரு சில காட்சிகளில் மட்டுமே ஈர்க்கிறது. சுரேன் விகாஷின் பின்னணி இசை சில இடங்களில் படத்தின் நீரோட்டத்தில் சுவாரசியத்தை கூட்டுகிறது.
மொத்தத்தில் ‘பன்றிக்கு நன்றி சொல்லி’ சிறப்பு.

Pandrikku Nandri Solli Movie Review