ஒடிசாவில் புகழ் பெற்ற சினிமா பின்னணி பாடகியாக வலம் வந்தவர், தபு மிஷ்ரா (வயது 36). இவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்ட நிலையில், அதற்கு பிந்தைய பாதிப்புகளால் புவனேஸ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 19-ந் தேதி சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த வாரம் அவரது உடல்நிலை மோசமடைந்ததால், 2 நாட்களாக வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
‘குலாநந்தன்’ என்ற ஒடியா படத்தில் அறிமுகமாகி 150-க்கும் மேற்பட்ட படங்களில் பாடி தனது இனிமையான குரலில் அனைவரையும் பரவசப்படுத்திய பாடகி தபுவின் மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது மறைவுக்கு பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பாடகி தபு மிஷ்ராவின் தந்தை கடந்த மாதம் 10-ந் தேதி கொரோனாவுக்கு பலியான நிலையில், தற்போது தபு மிஷ்ராவும் கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளால் மரணமடைந்திருப்பது அவர்களுடைய குடும்பத்தினரை தீராத சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.