சென்னையில் வசித்து வந்த நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக நேற்று (ஏப்.16) காலை 11 மணியளவில் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவமனையில் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை 4.35 மணியளவில் காலமானார்.
விவேக்கின் மறைவிற்கு பலரும் சமூக வலைத்தளத்தில் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஜினி தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘சின்னக் கலைவாணர், சமூக சேவகர், என்னுடைய நெருங்கிய இனிய நண்பர் விவேக் அவர்களுடைய மறைவுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது.
சிவாஜி படப்பிடிப்பில் அவருடன் நடித்த ஒவ்வொரு நாட்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள். அவரை பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். விவேக்கின் ஆத்மா சாந்தி அடையட்டும்’ இவ்வாறு பதிவு செய்திருக்கிறார்.