ரவுடிசம் செய்து வரும் பாரதிராஜாவுடன் வேலை பார்த்து வருகிறார் வசந்த் ரவி. பாரதிராஜாவின் மகனுக்கும் வசந்த் ரவிக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இதில் வசந்த் ரவியின் அம்மா ரோகிணியை கொலை செய்து விடுகிறார். இதனால் கோபமடையும் வசந்த் ரவி, பாரதிராஜா மகனை கொல்கிறார்.
ஜெயிலுக்கு சென்று பல ஆண்டுகள் கழித்து திரும்பும் வசந்த் ரவி, திருந்தி வாழ முயற்சி செய்கிறார். ஆனால், பாரதிராஜா வசந்த் ரவியை கொலை செய்ய துடிக்கிறார். இறுதியில் பாரதிராஜா வசந்த் ரவியை கொலை செய்தாரா? வசந்த் ரவி பாரதிராஜாவின் தொந்தரவை எப்படி சமாளித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் வசந்த் ரவி, வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அம்மா, தங்கை பாசம், சண்டை, ஏக்கம் என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். தங்கையாக வரும் ரவீனா ரவி, கோபம், பாசம் என நடிப்பில் வேற்றுமை காண்பித்து இருக்கிறார். படம் பார்ப்பவர்களை தன் மீது பரிதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறார். அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ரோகிணி.
பாரதிராஜா வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். வேறொரு பாரதிராஜாவை பார்க்க முடிகிறது. மகனை கொன்றவனை எப்படியாவது கொல்ல வேண்டும் என்று துடிப்பது பாசத்தின் உச்சம். மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
ரவுடிசம், பழிக்கு பழி வாங்கும் கதையை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் அருண் மாதேஸ்வரன். வழக்கமான கதை என்றாலும் அதில் வித்தியாசம் காண்பித்து இருக்கிறார் இயக்குனர். திரைக்கதை நகர்வுக்கு ஏற்றார் போல் ஒரு தலைப்பு வைத்து இயக்கி இருப்பது சிறப்பு.
ஸ்ரேயாஸ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். அதுபோல் தர்புகா சிவாவின் இசையும் வலு சேர்த்து இருக்கிறது. கதையோடு பயணிக்கும் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.