புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த 5-ந்தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சில தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து தினசரி அப்டேட்டுகளை அவரது மகன் சரண் கொடுத்து வந்தார்.
ஆனால் கடந்த சில தினங்களாக எஸ்.பி.பி உடல்நிலை குறித்து சரண் எந்தவித தகவலும் தெரிவிக்காமல் இருந்தார். இதனால் ரசிகர்கள் கவலை அடைந்தனர். தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் எஸ்.பி.பி உடல்நலம் குறித்து அப்டேட் கேட்டு வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை எஸ்.பி பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என ரிசல்ட் வந்திருப்பதாக சினிமா மக்கள் தொடர்பாளர் நிகில் டுவீட் செய்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள எஸ்.பி.பி சரண், “எப்போதும் மருத்துவர்களிடம் கலந்து ஆலோசித்த பின்னர், தந்தையின் உடல்நலம் பற்றி வீடியோ விடுவேன். ஆனால், இன்று காலை எஸ்.பி.பி.க்கு கொரோனா நெகடிவ் வந்துவிட்டதாக தகவல்கள் பரவின. நெகடிவ் அல்லது பாசிடிவ் என்பதல்ல விஷயம்.
அவர் தற்போதும் எக்மோ மற்றும் வெண்டிலேட்டர் உதவியுடனே சுவாசித்து வருகிறார். அவரின் உடல்நலம் பற்றிய தகவல் எனக்கே முதலில் வரும். ஆகவே, தவறான செய்திகளை வெளியிடுபவர்களிடம் கவனமாக இருங்கள்” என்று கூறியுள்ளார். எனினும், எஸ்.பி.பி.க்கு கொரோனா நெகடிவ் என்ற தகவல் உண்மையா என்றும் சரண் விளக்கமாக தெரிவிக்கவில்லை.
SP Charan Gives a Clarity and Update about SP Balu Sir Health Status #SPBalasubrahmanyam pic.twitter.com/zcUlBWe7AP
— Nikil Murukan (@onlynikil) August 24, 2020