‘உறியடி’ என்கிற முதல் படத்திலேயே சாதி பிரச்னை சார்ந்த ஒரு அழுத்தமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து, அதனை மாணவர்களின் வாழ்க்கையோடு இணைத்து அதிரடியாக கூறியவர் விஜய்குமார். இப்படத்திற்கு ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்றது.
அடுத்ததாக அவர் இயக்கி நடித்த ‘உறியடி 2’ திரைப்படமும் மக்களுக்கு, சுற்றுச்சூழலுக்கு தீங்காக விளங்கும் நச்சு ஆலையை பற்றி பதிவு செய்திருந்தது. மக்களின் உறுதிமிக்க போராட்டத்தை காட்சிப்படுத்தியதோடு, அரசியல் கட்சிகளின் போலி வேடத்தையும் ‘உறியடி 2’ தோலுரித்தது.
இதனால் தமிழ் திரை ரசிகர்களை பொறுத்தவரை, சமூக மேம்பாடு சார்ந்த கதைக்களத்தை மிக அழுத்தமாகவும், ரசிக்கும் வகையிலும் படமாக தரக்கூடியவர் விஜய்குமார் என்கிற பிம்பம் ஏற்பட்டிருக்கிறது.
இத்தகைய சூழலில் விஜய்குமாரின் நாயகனாக நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரீல் குட் பிலிம்ஸ் சார்பில் ஆதித்யா தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் அப்பாஸ் இயக்குகிறார். இதனை தயாரிப்பு நிறுவனம் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
