கமல் – ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த ஆண்டு படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விபத்து ஏற்பட்ட போது நிறுத்தப்பட்ட, இப்படத்தின் படப்பிடிப்பு அதன்பின் தொடங்கப்படவில்லை.
இதனிடையே, தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் புதிய படத்தை இயக்க ஷங்கர் தயாராகி வருகிறார். அதேபோல் அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கையும் இயக்க உள்ளதாக சமீபத்தில் அறிவித்தார் ஷங்கர்.
இதனிடையே, இந்தியன் 2 படத்தை முடிக்காமல் வேறு படத்தை ஷங்கர் இயக்க தடை விதிக்க கோரி ஐகோர்ட்டில் லைகா நிறுவனம் மேல்முறையீடு செய்திருந்தது. ஷங்கர் தரப்பு விளக்கத்தை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறிய நீதிமன்றம், ஷங்கர் தரப்பு விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தது.
அதன்படி ஷங்கர் தரப்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்தியன் 2 படத்தை அக்டோபருக்குள் முடித்துத் தர முயற்சிக்கிறேன் என குறிப்பிட்டுள்ள ஷங்கர், நடிகர் விவேக் மறைவால் வேறு நடிகரை வைத்து காட்சிகள் படமாக்க வேண்டி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, நீதிமன்ற உத்தரவால் இந்தியன் 2 படப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது என தெரிவித்த நீதிபதிகள், லைகா தரப்பும், இயக்குனர் ஷங்கரும் கலந்து பேசி இந்தியன் 2 படப் பிரச்சனைக்கு சுமூக தீர்வு காணுமாறு அறிவுறுத்தினர்.